கொலஸ்ட்ரால் பிரச்சனையை சமாளிக்க ஓட்ஸ் சீரியலுக்கும் ஆலிவ் எண்ணைக்கும் தற்காலிகமாக மாறியிருக்கின்றேன்.
சர்க்கரையிலிருந்து இன்னும் கொஞ்சநாட்கள்கூட தப்பித்திருக்கலாமென யாரோ ஐடியா சொன்னதால் இரவு சாதம் சாப்பிடுவதை நிறுத்தியாயிற்று. ரொட்டி, சப்பாத்தி இல்லையென்றால் கோதுமை நூடுல்ஸ்.
தினமும் ஒரு ஆப்பிளும் வாழைப்பழமும் சாப்பிடுவது கூட நல்லதாம்.
காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீரும் முக்கியம்.
இப்போது சம்மர். இருள்வர ஒன்பது மணியாகின்றது. அதனால் மாலையில் கும்பலாய் கிரிக்கெட் ஆட முடிகின்றது. வேர்க்க வேர்க்க பூங்காவில் நடக்க முடிகின்றது. ஆனாலும் எவன் துப்பாகிவைத்திருப்பானோ என்ற பயமும் உண்டு. குளிரத் தொடங்கியவுடன் ஜிம் கண்டிப்பாக செல்லவேண்டும்.
சில மென்பொருள் எஞ்சினியர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் ஏனோ இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கின்றது. அபசமாய் இங்கு நான் சொல்ல விரும்பவில்லை.
ஆமாங்க இந்த டிவியும் கம்ப்யூட்டரும் நம்மை மெல்ல மெல்லக் கொல்கின்றதாம். வியர்வை வெளியேறுவதில்லையே தவிர மூளை கன்னாபின்னாவென உழைக்கின்றதே. அதிலும் சவாலான வேலை வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் தொடர்ச்சியாய் நம் மூளையை இயக்குகின்றோம். நம்மில் அநேகம் பேருக்கு அங்கு சம்பளம் தெரிவதில்லை சவால் தான் கண்முன்னே தெரியும். அதனால் தானே நம் ஆட்கள் அதில் நம்பர் ஒண்ணாய் இருக்கின்றார்கள்.
ஐ.டியிலிருந்து சம்பந்தம் வருகிறது என்றாலே நம்மூர் பெண்கள் அலறுகின்றார்களாம்.இது சாப்ட்வேர்காரர்கள் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனை.கம்யூட்டரே கதியென கிடப்பானாம் அவன்.
கணவனும் மனைவியும் ஐ.டியிலேயே இருந்தால் சப்தமும் இருக்காது சண்டையும் இருக்காது. ஆளுக்கொரு லேப்டாப்பில் மூழ்கிவிடுவார்கள்.Google talk-ல் Goodnight சொல்லிக்கொள்வார்கள்.
மாதம் ஒருமுறை வழக்கமாய் அலுவலகம் வந்து உட்காரும் அந்த செவிலியம்மா போன வாரம் வந்திருந்தார்கள். அப்படியே ஒரு ஓரத்தில் அமர்ந்து ஆர்வமுள்ளோருக்கு பிளட் பிரசர் செக் செய்வது அவர்கள் வழக்கம். எனது கையை பிடித்து ஒரு பம்பை அழுத்தி சோதித்து little above normal என்றார்கள். "ரொம்ப டென்சன் ஆகாதீங்க, ரொம்ப யோசிக்காதீங்க, நல்லா தூங்குங்கனு" அறிவுரை கொடுத்தார்கள்.
கோபாலும் அதை ஆமோதித்து "ம்" கொட்டினான்.
"ரொம்ப பதிவுகள் எழுதி உடம்பை கெடுத்துக்காத" என்றான்.