அமெரிக்க மருத்துவமனைகளில் ER (Emergecy room) என்றொண்டு.ஆத்திர அவசரமாய் போனாலும் ரத்தம் சொட்டச் சொட்ட போனாலும் அத்தனை எளிதாய் டாக்டரை பார்க்க முடியாது. உடனடி சிகிட்சையின்றி ER-யிலேயே துடி துடித்துச் செத்துப் போனவர்கள் பற்றியும் செய்திகள் கேள்விபட்டிருக்கிறேன். உண்மையிலேயே ஏதாவது அவசரமெனில் 911 கூப்பிட்டு ஆம்புலன்சில் போனால் தான் உடனடி சிகிட்சை கிடைக்கும் போலும். ஆனால் ஒரு முறை உள்ளே போய்விட்டால் அத்தனை டெஸ்ட்களையும் செய்யச் சொல்லி ஆளை புரட்டி எடுத்து விடுகின்றார்கள்.எல்லா செலவையும் இங்கே மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்த்துக்குதே. ஆக மேல் நான் சொன்ன கோபாலின் அப்பா நிகழ்வு அமெரிக்காவில் நடந்திருந்தால் எதாவது ஒரு மருத்துவ டெஸ்ட் அதை காண்பித்துக்கொடுத்திருக்கும். அவரும் பிழைத்திருப்பார்.
"ஏப்ரல் மாதத்தில்" கதையில் தோன்றும் ஸ்ரீகாந்துக்குக்கு ஒரு ஆசையிருக்கும் அவர் அம்மாவை எப்படியாவது ஒரு நாள் விமானம் ஏற்றி காண்பிக்க வேண்டுமென்று. அது போலவே கோபாலுக்கும் ஒரு ஆசையிருந்திருக்கிறது. அப்படியே கருகிப்போனது. அதுதான் வேதனையின் உச்சக் கட்டம்.
நம் வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தரும் Dr.K ஒருமுறை இப்படியாக எழுதியிருந்தார்."ஹலோ பிகேபி சார், சப்ஜெக்ட் கொஞ்சம் ஹெவி. என் தந்தை வானுலகம் ஏகி 4 வருடங்கள் ஆகிவிட்டன. அவரை நினைக்காத நாளே இல்லை. தந்தையை விட தோழர் என்றே சொல்லலாம்.அப்படி ஒரு ஜென்டில்மேன்.சிறு வயதில், ரத்தம் சூடான சமயத்தில் பல தடவை அவரிடம் சண்டை போடுவேன். நானும் அவர் மீது பாசமாய்தான் இருப்பேன். அவர் மிலிட்டரி ரிட்டையர்டு, நான் மெடிக்கல் காலேஜ் படிக்கும் போது ரெண்டு பேரும் ஒன்றாய் சரக்கு சாப்பிடுவோம். சிறு வயதிலேயே சோமபானத்தை ஒழுங்காக கையாண்டதால், அதை பெரிய தவறு என்று சொல்ல மாட்டேன்.
இப்போதெல்லாம் அவரை பற்றி நினைக்கும் போது இன்னும் நன்றாக அவரை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.என்ன செய்வது காலம் கடந்த ஞானம்.இதைப் படிக்கும் அன்பர்களுக்கு நான் சொல்வது "வாழும் காலம் குறைவு ஆகையால் தாய் தந்தையரை பேணி பாதுகாருங்கள்" As some englishman used to say "The day you start realising what your father said was right, you already have a son who says you are wrong "
என் அப்பாவின் இன்னொரு சொல்வடை "தெரிஞ்ச தொழிலை தொடாதவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்" இது எப்படி இருக்கு" என்று எழுதியிருந்தார்.
மேல் சொன்ன இரண்டு சம்பவங்களும் அடிக்கடி ஏனோ என் நெஞ்சில் வந்து போய்க் கொண்டிருந்தன. அதனால் இன்று இதை எழுதத் துணிந்தேன்.
இப்படி ஒரு வாக்குமூலத்தை தன் மகன் வாயாலே சொல்லவைக்குமளவுக்கு வாழ்ந்த தந்தைகள் எல்லாருக்கும் கொடுத்து வைக்காது தான். அதுவும் ஒரு வித அதிஷ்டமே. ஆனால் எல்லோரும் அது போன்ற ஒரு தந்தையராய் வாழ முயலலாம். நம் குழந்தைகளுக்காவது அவ்வதிஷ்டம் கிடைக்குமே.