Tuesday, June 5, 2007

கண்டான்....படைத்தான்....

Biomimicry அல்லது Bionics பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ கவிஞர் கண்ணதாசனுக்கு முப்பது வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் இப்படி பாடினார் போலும். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான். எதனைக்கண்டான் பணம் தனைப் படைத்தான் என்று.இதைவிட தெளிவாய் Biomimic-ஐ விளக்கமுடியாது. மனிதன் தனக்கு தேவையான தீர்வுகளை இயற்கையிடமிருந்து எளிதாக கற்று கொள்ளலே இந்த பயோமிமிக்ரி. சில வருடங்களில் இந்த டெக்னாலஜி அதிகம் பேசப்படும் என்கின்றார்கள்.

வேதிய பொருட்களால் பெயிண்ட் தயாரிப்பதைவிட பூக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் எப்படி வண்ணம் பெறுகின்றதோ அப்படியே வண்ணம் தயாரித்தால் என்ன?. அழகாகவும் இருக்கும் சுற்று சூழலும் கெடாதே.

தாமரை தன்மேல் விழும் தண்ணீரை வழுக்கி விட்டுவிடுகின்றதே...இப்படியே வீட்டு கூரைகளையும், சுவர்களையும் அமைத்தால்...நல்ல பாதுகாப்பாச்சுதே.

மின்மினி பூச்சி போல் விளக்கு எரிய வைக்க முடியுமா? இப்படி பலவாறு யோசிக்கின்றார்கள்.

சுருங்கக்கூரின் இயந்திரவியலானது இப்போது உயிரியலை படிக்கின்றது.

ஆக்கவழியில் பலர் சிந்திக்க வழக்கம்போல அழிவுவேலைக்கும் சிலர் சிந்திக்கின்றார்கள்.
கொசுவை மாடலுக்கு கொண்டு, படத்தில் காண்பது போல "bionic hornet" எனும் "எந்திரகொசு"-வை இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றார்கள். இது ஓடோடி விரட்டி பறந்து எதிரியை தாக்கி கொல்வதோடு கூடவே கேமராவால் படமும் எடுத்துக்கொண்டு வருமாம்.

"சிறு ஆயுதங்களின் தேவையை லெபனான் போர் உணர்த்தியது. தற்கொலைபடை தீவிரவாதியை கொல்ல 100 மில்லியன் டாலர் விமானத்தை அனுப்புதல் அனாவசியம். அதனால் எதிர்காலத்திய ஆயுதங்களை உருவாக்குகிறோம்" என்கிறார் இஸ்ரேலிய துணைபிரதமர் சைமன் பெரேஸ்.